Thursday, July 26, 2012

தன்மானத்திற்கு வெகுமானம்

தன்மானத்திற்கு வெகுமானம்

தாயின் கருவில் வளரும்போதே - தன் 
மானமும் வளர்ந்ததுவே - பின்பு 
தரைக்குவந்த நாள்முதலாய்- அதுவும்
தவழ்ந்து வந்ததுவே !
தாழ்வாய்ப் பார்த்த யாரையுமேயது 
தட்டிக்கேட்டதுவே- உயிர் 
எட்டிப்பார்த்ததுவே - மனம் 
திட்டம் போட்டதுவே ! 


நமக்கு யாரடா முதலாளி- நாம் 
அனைவரும் இயற்கையின் தொழிலாளி 
தனியொரு மனித ஜடத்தின் 
முன்னேச்சென்று 
கைகட்டி நிற்பதுவோ 
மெய்ச்சுருக்கி அவன்சொல் கேட்பதுவோ?


ஊர்க்காக்கும் காவலனைக்கண்டு 
பயந்து ஓளிந்து ஓடுவதோ - பெருங் 
கடல்தனிலேச் சென்று 
உப்பினைத் தேடுவதோ-பெண் 
கற்பினைப் பாடுவதோ?-உன் 
தப்பினைச் சாடுவதோ?..


மூன்றுவேளையும் உனக்குத்தேவை 
நல்லவித உணவு 
உன்னகத்தே சுத்தமாக 
இல்லையொரு கனவு 
எங்கேயும் யாரிடத்தும் 
யாதென்று வினவு 
எப்போது என்கனவு 
ஆகுமொரு நனவு - உன் 


கண்களிலே எப்போதும் 
தெரியவேண்டும் வீரம்- உன் 
பின்னோரும் உணரவேண்டும் 
அதனுடைய சாரம் - உன் 
எதிரிக்கும்  மிகுதியாக  
இருக்கவேண்டும் தகுதி 
ஏழையாகப் பிறந்தாலும் 
கோழையாக இறக்காதே!


உழைக்கும் கரங்கள் 
உயர்ந்திட வேண்டும் -மனித 
உறவுகள் இன்னும் 
உரம்பெற வேண்டும் -பிறரை 
அண்டிப்பிழைக்கும் 
அடிமை வாழ்க்கை 
அறவே இங்கே 
அழிந்திட வேண்டும் 


பாசத்தால் யார் 
பரிவு செய்தாலும் 
பாதம்பணியும் 
மேன்மை வேண்டும் 
பாதக நெஞ்சோர் 
பக்கத்தில் வந்தால் 
பதறவைக்கும் 
ஆண்மைவேண்டும் 
பாரதத்தாயைப் 
பழிப்பவர் கண்டால் 
பாம்பென் றெண்ணிப்  
பிளந்திட வேண்டும்!!!
                                                                       -ஆனந்தன் 



No comments:

Post a Comment