Sunday, May 15, 2011

மறுபடி எழுந்தான் மாவீரன்!

மறுபடி எழுந்தான் மாவீரன்!


காலங்கள்கொல்லும்
காலனின் பசிக்கு
மனிதனின் உயிர்தான் 
உணவாச்சோ! 
கனவுகள்கொண்டோர் 
உயிரினைக் கொய்தல்
காலா! உந்தன் கனவாச்சோ!

காலா நீயும் 
எங்கேயுள்ளாய்- என் 
கண்முன் வந்தே 
நிற்பாயோ!
வேலாய் பாய்ந்து 
தீமைக்கொல்லும்- என் 
விழியில் பாடம் 
கற்பாயோ!

எந்தன் நெஞ்சின் 
உறுதிக்கிணையாய்
ஊரில் சொல்வர்     
எஃகினை!- அதை 
அறிந்தபின்னும் 
என்னுயிர் வேண்டின் 
நீயே உலகில் 
அஃறிணை!

பூமியின் சூரியன்
இவனிடமுந்தன் 
சாகசவேலைகள் 
செல்லாது 
பூகம்பம் கடலலை 
புயல் வந்தாலும்- இவன் 
பார்வையின் முன்னே 
நில்லாது!

மானிட இனத்தினை 
மாயத்திடுமுந்தன் 
மந்திரமோர் நாள் 
பொய்த்துவிடும் 
விண்வெளிஎட்டும்
விஞ்ஞானம் தான்- உன் 
வேலைக்கு உலையும் 
வைத்துவிடும் 

எலும்பும் சதையும் 
குருதியும் கொண்ட 
பிண்டங்களென்றா
எமை நினைத்தாய்!
எதையும் தாங்கும் 
இதயம்கொண்ட - தீக் 
குளத்தினில் நீயும் 
கால் நனைத்தாய்!

பூமியிலெந்தன்
புகழினைக் கண்டு 
முட்டாள் காலனும்
திகைத்தானோ!
தீபத்தில் மோதி
ஜீவனை மாய்க்கும்
விட்டில் போலென்னைப்
பகைத்தானோ! - காலா! நான்

இடியொலி கேட்ட 
நாகம்- என்முன் நீ
உண்டிவில் கண்ட
காகம்- என்
உயிரின் மீதுனக்கு
மோகம் - நான்
என்றும் அழியா
ராகம்!!!

                                                                      -ஆனந்தன்

2 comments: