Friday, March 18, 2011

காலமே....!

              காலமே!!!



அருளைத் தா பொருளைத் தா
என்றுன்னைக் கேட்கவில்லை-என்
வாழ்க்கையிலேச் சூழ்ந்திருக்கும்
இருள்தன்னை நீக்கிவிடு..!

கொடையைத் தா படையைத் தா
என்றுன்னை கேட்கவில்லை-என்
பாதையிலே படர்ந்திருக்கும்
தடைதன்னை நீக்கிவிடு...!
 

தனத்தைத் தா பணத்தைத் தா
என்றுன்னைக் கேட்கவில்லை
மரணம் கண்டும் மதித்திடாத
மனத்தைமட்டும் தந்துவிடு...!

கருணைத் தா உரிமைத் தா
என்றுன்னைக் கேட்கவில்லை
கவிழ்ந்தபின்னும் நிமிர்ந்துநிற்கும்
திறனை மட்டும் தந்துவிடு..!
 

நிலத்தைத் தா வளத்தைத் தா
என்றுன்னைக் கேட்கவில்லை-எதிர்கால
பயமின்றி வாழநெஞ்சில்
பலத்தைமட்டும் தந்துவிடு...!

கடலைத் தா திடலைத் தா
என்றுன்னைக் கேட்கவில்லை-கனவை
எட்டும்வரைக் குலைந்திடாத
உடலைமட்டும் தந்துவிடு...!
 

வாலிபம் தா வயோதிகம் தா
என்றுன்னைக் கேட்கவில்லை
எதனை நீ தந்தாலும்-என்னை
வானகம்போல் வாழவிடு...!

மாளிகைத் தா மகுடம் தா
என்றுன்னைக் கேட்கவில்லை-என்
இவ்வாழ்வை என்றைக்கும்
 மறந்திடாத ஞாபகம் தா...!
 

பெண்களென்ற இன்பம் தா
பேருலக செல்வம் தா
என்றெல்லாம் நானுன்னை
என்றைக்கும் கேட்டதில்லை...
என்னைமிக நேசிக்கும்
எல்லார்க்கும் ஒளிகாட்ட-என்
கண்ணைத்தர நேர்ந்தாலும்
வழிகாட்டத் துணையைத் தா...!

மஞ்சம் தரும் சுகத்தைத் தா
மன்மதனின் முகத்தைத் தா
என்றெல்லாம் நானுன்னை
என்றைக்கும் கேட்டதில்லை..-நான்
அடையயெண்ணும் இலக்கைஎட்ட -என்
அகத்திற்கின்னும் அறிவைத் தா......!


                                                                                           -ஆனந்தன்    
ஏனையக் கவிதைகளுக்கு

www.naanananthan.webs.com

No comments:

Post a Comment